ஹஃபீஸ் சயீதை துன்புறுத்த வேண்டாம்: பாக். அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரான ஹஃபீஸ் சயீதை, துன்புறுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரான ஹஃபீஸ் சயீதை, துன்புறுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தாம் செய்து வரும் நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் தடுப்பதாக, ஹஃபீஸ் சயீது தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் இதனை தெரிவித்தது. அத்துடன், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரையில் ஹஃபீஸ் சயீது சமூக நலப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி அமீனத் தின் கான், ஹஃபீஸ் சயீது தாக்கல் செய்துள்ள மனு மீது 23-ஆம் தேதிக்குள்ளாக பதிலளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் உத்தரவிட்டார். லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரான ஹஃபீஸ் சயீது, முன்னதாக தாம் தாக்கல் செய்த மனுவில், இந்தியா மற்றும் அமெரிக்கா அளிக்கும் அழுத்தத்தின் காரணமாகவே தனது ஜமாத்-உத்-தவா அமைப்பின் நலத் திட்டங்களை பாகிஸ்தான் அரசு தடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். ஓர் அமைப்பு மேற்கொள்ளும் நலப்பணிகளை தடுப்பது, அரசியல் சாசனத்
துக்கு எதிரானதாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஹஃபீஸ் சயீதால் தொடங்கப்பட்ட 'மிலி முஸ்லிம் லீக்' அரசியல் கட்சியை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அக்கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய 7 பேருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட சில அமைப்புகள் நன்கொடை பெற ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பாகிஸ்தான் தரப்பிலும் அதற்கு தடை விதிகப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.