சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக கினா ஹஸ்பெல் நியமனம்
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக கினா ஹஸ்பெலை அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை முறைப்படி நியமித்தார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக கினா ஹஸ்பெலை அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை முறைப்படி நியமித்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சனை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு சிஐஏ-வின் இயக்குநர் மைக் போம்பியோ நியமிக்கப்பட்டார்.
அத்துடன், சிஐஏ-வின் துணை இயக்குநர் கினா ஹஸ்பெலை, புதிய இயக்குநராக நியமிப்பது தொடர்பான அறிவிப்பை, சுட்டுரை வாயிலாக டிரம்ப் வெளியிட்டார்.
இந்நிலையில், கினா ஹஸ்பெல் நியமனம் தொடர்பான அறிவிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2001-இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின்போது, பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடம் மிக கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக கினா ஹஸ்பெல் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அவரது நியமனம் தவறானது என்று சில எம்.பி.க்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில், கினா ஹஸ்பெலின் நியமனத்தை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை, எதிர்வரும் நாள்களில் செனட் குழு தொடங்கவிருக்கிறது.