பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்
பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. அமைப்பால் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மட்டுமன்றி, தனிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இக்கருத்தை ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வந்துள்ள ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை முதன்மை பிரதிநிதி ஃபெடரிகா மோஹேரினி தலைமையிலான குழுவினர், இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியை ஞாயிற்றுக்கிழை சந்தித்துப் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஐ.நா. அமைப்பால் அறிவிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளுக்கு எதிராக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் தெளிவான, நிலையான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதே ஐரோப்பிய யூனியனின் கொள்கை என்று அவர் கூறினார். இதுதவிர, இந்தியத் தலைவர்களையும் ஃபெடரிகா மோஹெரினி தொடர்பு கொண்டு பேசினார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாதி கடந்த வாரம் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களையும், பயங்கரவாதிகளையும் உடனடியாக அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதுமட்டுமன்றி, சிறந்த நட்பு நாடு எந்த அந்தஸ்தை இந்திய திரும்பப் பெற்றுக் கொண்டது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் சுங்க வரியை 200 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.