முகப்பு
உலகம்

கொசுவால் கிடைத்த பரிசு! ஜெர்மனியில் சுவாரஸ்யம்

இலவு காத்த கிளிக்கு மாம்பழம் கிடைத்தால்....அப்படி ஒரு பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாஸ் டாம் என்பவருக்கு கிடைத்திருக்கிறது. 

Updated On : 10 ஜூன், 2019 at 1:09 PM
பகிர்:

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுத்தால்.....

இலவு காத்த கிளிக்கு மாம்பழம் கிடைத்தால்.....

அப்படி ஒரு பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாஸ் டாம் என்பவருக்கு கிடைத்திருக்கிறது. ஆம்! ஜெர்மனியில் இயற்கை புகைப்படக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் அவருடைய 'கொசுவை எதிர்கொண்ட சுண்டெலி'யின் புகைப்படத்துக்கு முதல்  பரிசு கிடைத்துள்ளது.

Advertisement

ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியில் உள்ள இயற்கை புகைப்படக்கலைஞர்கள் சங்கம் சார்பாக 7 பிரிவுகளில், 

அதாவது:- பறவைகள்,  பாலூட்டிகள், பிற விலங்குகள், செடிகள், இயற்கை நிலக்காட்சி, இயற்கை ஸ்டுடியோ மற்றும் ஆக்க்ஷன் என்ற வகையில் புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது. அதில் க்ளாஸ் டாமின் புகைப்படம் முதல் பரிசை தட்டிச்சென்றது.

இதைப்பற்றி க்ளாஸ் டாம் கூறும்போது,

"டோர்ட்முண்ட் நகரிலுள்ள ரோம்பெர்க் பூங்காவிற்கு  நண்பருடன் செல்வது வழக்கம். குளிர் காலங்களில் பலர் பறவைகளுக்கு பிரட் துண்டுகளை உணவாக விசிறி செல்வதையும் கவனித்திருக்கிறேன்.

சிந்தி சிதறி கிடைக்கும் பிரட் துண்டுகளை மாலையில் எலிகள் வந்து உண்ணும். அதை சிலமுறை புகைப்படமும் எடுத்திருக்கிறேன்.

ஆனால் எதுவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை. இந்த பரிசு பெற்ற புகைப்படத்துக்காக பலமுறை காத்திருந்து, சரியான பின்புல ஒளியில் போட்டோ எடுக்கும் போது அங்கே ஒரு கொசு வர, புகைப்படம்  சிறப்பாக அமைந்தது" என்றார்.

7 பிரிவுகளில் பரிசுகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த புகைப்படம் அவை எல்லாவற்றிற்கும் முதன்மையாக முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது. க்ளாஸ் டாம்  பலமுறை சிறந்த புகைப்படத்துக்கான பரிசு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo: www.gdtfoto.de

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.