அமெரிக்க வன்முறை: 'கேபிடல்' காவல்துறை தலைவர் ராஜிநாமா
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, 'கேபிடல்' காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, 'கேபிடல்' காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார்.
நேற்று பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். அதில் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்றதையடுத்து, இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Advertisement
இந்த நிகழ்வின்போது, நாடாளுமன்றக் கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை காவல்துறை தடுத்தபோது வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நாடாளுமன்ற கட்டடம் முன்பாக பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த டிரம்ப்பின் ஆதரவாளர்களை தடுக்க 'கேபிடல்' போலீஸ் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து இந்த விமர்சனத்திற்கு பொறுப்பேற்று அமெரிக்க 'கேபிடல்' காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சண்ட் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் சக் ஷுமர் ஆகியோர், 'கேபிடல்' காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சண்ட்-யை ராஜினாமா செய்யக் கோரியதுடன், அவர் ராஜிநாமா செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அறிவித்தனர். இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் சண்ட், தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.