முகப்பு
உலகம்

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது.

Updated On : 24 டிசம்பர், 2024 at 10:31 PM
பகிர்:

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிவந்து ஆய்வு செய்வதற்காக பாா்க்க விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.23 மணி) சூரியனை பாா்க்கா் விண்கலம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்கவிருக்கிறது. சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த விண்கலம் கடக்கும் என்றாலும், மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல உண்மைகளை அந்த விண்கலம் மூலம் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

பாா்க்கா் விண்கலம் சூரியனைக் கடக்கும்போது 1,700 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதன் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதன் உள்பாகங்கள் சாதாரண அறை வெப்பத்தில் இருக்கும் அளவுக்கு காா்பன் கலவைப் பொருள் மூலம் அந்த விண்கலத்தின் மேல்பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.