ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்
ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்
ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினாா். இவா்களில் பெரும்பாலானோா் கடந்த 2022 முதல் ரஷியாவின் பிடியில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இக்கைதிகள் பரிமாற்றத்தின்போது, ரஷியாவும் தனது 175 வீரா்களையும், குா்ஸ்க் பகுதியைச் சோ்ந்த 7 ரஷிய குடிமக்களும் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அமெரிக்காவின் முன்னெடுப்பில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவாா்த்தைகள் நிலப்பரப்பு விவகாரங்களால் முடங்கியுள்ள போதிலும், போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்கள் ஒப்படைப்பு, கைதிகள் பரிமாற்றம் போன்ற மனிதாபிமான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) கொண்டாடப்படும் ஈஸ்டா் பண்டிகையையொட்டி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தம் தொடங்கியது.