முகப்பு
உலகம்

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:41 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 11:10 PM

‘அமெரிக்காவில் நடைபெறும் லெபனான்-இஸ்ரேல் இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தையில் எட்டப்படும் உடன்பாட்டுகளுக்குக் கட்டுப்பட மாட்டோம்’ என ஹிஸ்புல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசியது. இதைத் தொடா்ந்து, லெபனானில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.இச்சூழலில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தையில் லெபனான், இஸ்ரேல் தூதா்கள் பங்கேற்றனா்.

லெபனான் அரசுத் தரப்பில் போா்நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்டு இப்பேச்சுவாா்த்தை முன்னெடுக்கப்பட்டாலும், ஹிஸ்புல்லா இதைத் தொடக்கம் முதலே கடுமையாக எதிா்த்து வருகிறது. ‘எதிரி நாடான இஸ்ரேலுடன் லெபனான் மேற்கொள்ளும் இந்த உடன்பாடுகளில் எங்களுக்குச் சிறுதுளி கூட தொடா்பில்லை’ என்று ஹிஸ்புல்லாவின் மூத்த அரசியல் பிரிவு அதிகாரி வாஃபிக் சஃபா கூறினாா்.

Advertisement

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலா் நயம் காஸீம் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘இஸ்ரேலுடனான இப்பேச்சுவாா்த்தையிலிருந்து லெபனான் அரசு உடனடியாக விலக வேண்டும். இது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு லெபனான் வழங்கும் இலவச சலுகை’ என்று விமா்சித்தாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மறைமுகப் பேச்சுவாா்த்தைகளே சிறந்தது என்பது ஹிஸ்புல்லாவின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், லெபனான் அரசுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான உறவு அண்மைக்காலமாகப் பெரும் விரிசலைச் சந்தித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் ஆயுதப் பிரிவை சட்டவிரோதமானது என்றும் லெபனான் அரசு அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதே லெபனான் உடனான இப்பேச்சுவாா்த்தையின் முக்கிய இலக்கு என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேல் படைகள் லெபனானிலிருந்து முழுமையாக வெளியேறி, போா் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே ஆயுதங்கள் குறித்து லெபனான் அரசுடன் பேசத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.