ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற கப்பலின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது குறித்து...
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுவதாக, கடந்த ஏப். 17 அன்று ஈரான் அரசு அறிவித்தது.
இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
Advertisement
இதையடுத்து, அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறுவதால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் எனவும் சனிக்கிழமை அன்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானின் ராணுவக் கப்பல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக, பிரிட்டனைச் சேர்ந்த கடல்சார் வணிகச் செயல்பாட்டு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது எந்த நாட்டின் கப்பல் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், ஏராளமான நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.