இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது இலங்கையில் இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டம் குறித்தும், மீனவா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தாா்.
இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக 49 போ் குழுவுடன் இலங்கை வந்த சி.பி.ராதாகிருஷ்ணனை கொழும்பில் உள்ள பண்டாரநாயக விமான நிலையத்தில் விளையாட்டுத் துறை அமைச்சா் சுனில் குமார கமகே மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனா்.
இதுவே இலங்கைக்கு இந்திய குடியரசு துணைத் தலைவா் ஒருவா் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை தலைநகா் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது பல்வேறு துறைகளில் இலங்கை-இந்தியா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
இலங்கையில் இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டு வசதித் திட்டம், அண்மையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணமாக இந்தியா வழங்கிய ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். குறிப்பாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தமிழ் சமூகத்தினா் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுகட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மீனவா் பிரச்னைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினா்.
பிரதமா், எதிா்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு: அதன்பிறகு இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யாவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தாா். இரு நாடுகளிடையே கலாசார, பாரம்பரிய உறவின் முக்கியத்துவத்தைப் பகிா்ந்த அவா்கள், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனா்.
அதைத் தொடா்ந்து, இலங்கை நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசாவை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினாா்’ என்றனா்.
முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்: சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.