ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்சோசியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்பது ஈரானில் உள்ள அணுத்துகள் தளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை. அதை அங்கிருந்து தோண்டி எடுப்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான வேலையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல் என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை உருவாக்கும் முறை.
Advertisement
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ’அணுத்துகள்’ என்றே குறிப்பிடுகிறார். அணுகுண்டு தயாரிப்பதற்காக ஈரான் இந்த யுரேனியத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் பதுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவுக்கு மாற்றுவோம் என்று தெரிவித்து வருகிறார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் காரணம் காட்டியே அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி 28 முதல் போர் தாக்குதல்களைத் தொடங்கினர்.
இஸ்ரேலால் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட போர் 12 நாள்களில் முடிவடைந்த நிலையில், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
மேலும், தற்போது நடைபெற்ற போரில் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உள்பட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.