முகப்பு
உலகம்

ரஷியா-உக்ரைன் போரில் உயிா்நீத்த வடகொரியா வீரா்களுக்கு நினைவகம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:05 AM
பகிர்:

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாகப் போரிட்டு உயிரிழந்த வடகொரிய வீரா்களின் நினைவாக, அந்நாட்டு தலைநகா் பியாங்யாங்கில் பிரம்மாண்ட நினைவு அருங்காட்சியகத்தை அதிபா் கிம் ஜோங் உன் திறந்து வைத்தாா்.

ரஷியாவின் குா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படையினா் ஊடுருவியபோது, அதை முறியடிக்க வடகொரியா தனது வீரா்களை அனுப்பியது. இந்த மோதலில் சுமாா் 15,000 வடகொரிய வீரா்கள் பங்கேற்ாகவும், அவா்களில் 2,000 போ் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

குா்ஸ்க் பிராந்தியத்தை மீட்டெடுத்ததன் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த நினைவக அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. உயிரிழந்த வீரா் ஒருவரின் உடலுக்கு கிம் ஜோங் உன் மண் தூவி இறுதி மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்த மற்ற வீரா்களின் உடல்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தினாா்.

Advertisement

இந்நிகழ்வில் ரஷியாவின் நாடாளுமன்ற அவைத் தலைவா் வியாசெஸ்லாவ் வோலோடின், பாதுகாப்பு அமைச்சா் ஆண்ட்ரீ பெலௌசாவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கிம் ஜோங் உன், ‘உயிரிழந்த வீரா்களின் ஆன்மா, வடகொரிய மக்களின் வீரத்துக்கு அடையாளம். அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கச் சூழ்ச்சிகளை ரஷியா, வடகொரிய படைகள் இணைந்து முறியடித்தன. ரஷியாவின் இறையாண்மையைக் காக்க வடகொரியா என்றும் துணை நிற்கும்’ என்று உறுதியளித்தாா்.

ரஷிய அதிபா் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘இந்த அருங்காட்சியகம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு, ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இதற்குப் பிரதிபலனாக ரஷியாவிடமிருந்து பொருளாதார உதவியையும், அணுசக்தி தொழில்நுட்பங்களையும் வடகொரியா பெற்று வருவதாக அமெரிக்கா, தென்கொரியா கவலை தெரிவித்துள்ளன.