அணு ஆயுதம் தற்காப்புக்கான வழிமுறை! - ஜி7 அழைப்புக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கண்டனம்!
ஜி7 மாநாட்டில் முன்மொழியப்பட்ட அழைப்புக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் கண்டனம் தெரிவித்துள்ளார்...
வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்துள்ளது தற்காப்புக்கான வழிமுறை எனக் குறிப்பிட்டு ஜி7 மாநாட்டில் முன்மொழியப்பட்ட அழைப்புகளுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) அன்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு இணங்க வட கொரியாவை முழுமையாக அணு ஆயுதங்களற்ற நாடாக மாற்றுவதற்கு வலியுறுத்தி ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்தக் கூட்டறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் காலத்திற்குப் பொருந்தாத அழைப்புகளை முன்மொழிவதாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறியுள்ளதாவது:
“நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த சாதனங்களாகவும், அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய அடிப்படையாகவும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை வடகொரிய சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளன. அணு ஆயுதங்கள் தற்காப்புக்கான ஒரு சாதனம்.
அணுசக்தி மிக்க நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எவரும் பேரழிவை வரவழைக்கும் மிக மோசமான முடிவையே எடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வடகொரியாவை முழுமையாக அணு ஆயுதங்களற்ற நாடாக மாற்ற வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.