உக்ரைன் போர்: ரஷிய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!
உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போருக்கு வட கொரியா மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரஷியாவிற்கு ஏவுகணைகள், வெடிபொருட்கள், ராணுவ உதவிகள் போன்றவற்றை வட கொரியா வழங்கியுள்ளது. அதற்கு பதில் உதவியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவிற்கு ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு, எரிசக்தி போன்ற உதவிகளை ரஷியா வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் அதிகாரப்பூர்வமாக வட கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டது, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலூசாவ் வட கொரிய அதிபரை ஞாயிறன்று (ஏப்ரல் 26) சந்தித்தது இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Advertisement
”நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க ரஷியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா முழுமையாக ஆதரிக்கும். தற்போது நடைபெறும் புனிதப் போரில் ரஷிய ராணுவமும், மக்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவர்” என்று கிம் ஜாங் உன் ரஷிய அமைச்சரிடம் தெரிவித்ததாக வட கொரிய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
வடகொரியா - ரஷியா இடையேயான ஆழமான இராணுவ உறவுகள் குறித்து அதிகாரிகள் இணைந்து விவாதித்ததாகவும், 2027 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்திற்கான ராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத்திட ரஷியா தயாராக இருப்பதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பெலூசாவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களுக்கான நினைவு வளாகத்தின் திறப்பு விழாவிலும் ரஷிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வட கொரியாவும் ரஷியாவும் 2024-ல் மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளின் மீதும் எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும் தாமதமின்றி ஒரு நாடு ராணுவ உதவியை மற்றொரு நாட்டிற்கு வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.