எப்ஸ்டீன் கோப்புகள்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்!
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளது குறித்து...
எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு பாதிக்கப்பட்டவர்களிடம் பிரிட்டனின் பிரதமர் கியெர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு கடந்த 2025 நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜன.30 அன்று 35 லட்சப் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்தக் கோப்புகளில் உள்ளவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதும், அவர் எப்ஸ்டீனுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனால், கடந்த 2025 செப்டம்பரில் பீட்டர் மண்டேல்சனை தூதர் பதவியிலிருந்து நீக்கி பிரதமர் ஸ்டார்மர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பீட்டர் மண்டேல்சனின் பொய்களை நம்பி அவருக்கு பதவி வழங்கியதாகக் கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்; அதற்காக எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று (பிப். 5) மன்னிப்பு கோரியுள்ளார். புதியதாக எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்டார்மரின் அரசு கடும் அழுத்ததில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரின் பெயர்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.