பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு குறித்து...
பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜூன் 17 ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
இதில் பொருளாதார வளர்ச்சி, செய்யறிவு, முதலீட்டுப் பங்களிப்புகள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
Advertisement
Advertisement
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.
தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸின் துறைமுக நகரான நைஸை சென்றடையும் பிரதமர், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
பிரான்ஸின் நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஜூன் 14 முதல் 16 வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
வரும் ஜூன் 16-ஆம் தேதி மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பும் பிரதமர், ஏவியான் நகரில் இரு நாள்கள் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இக்கூட்டமைப்பில் உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கின்றன. இந்த உச்சிமாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளார்.
வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள தகவலின்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு, ஜி7 நாடுகளின் தலைவர்கள், கூட்டமைப்பு நாடுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் அலுவல் சார்ந்த மதிய உணவு (working lunch) நிகழ்வுக்கு முன்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் செய்யறிவு உள்ளிட்ட இருதரப்பினருக்கும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்துவார்,” என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக பாரீஸில் ஜூன் 18, 19 தேதிகளில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டில் அதிபர் மேக்ரானுடன் பங்கேற்கவுள்ளார்.