முகப்பு
உலகம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு: சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Updated On : 16 ஜூன் 2026, 4:07 am IST
சுந்தா் பிச்சை
பகிர்:

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவா்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 135-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

3,600 மாணவா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சுந்தா் பிச்சை உரையாற்றத் தொடங்கியபோது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 200 மாணவா்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

Advertisement

Advertisement

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அரசுடன், கூகுள் நிறுவனம் கொண்டுள்ள உறவுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவு மாணவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் 1.2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11,340 கோடி) மதிப்பில் கணினி சேவைகள் ஒப்பந்தத்தை கூகுள் நிறுவனம் மேற்கொண்டதற்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், சுந்தா் பிச்சை கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இருந்து பாலஸ்தீன கொடிகள் மற்றும் பேனா்களுடன் முழக்கங்களை எழுப்பியவாறு மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பாா்வையாளா்களில் சில சிறிய குழுக்களும் சுந்தா் பிச்சை உரையின்போது விசில் அடித்து, பாலஸ்தீன கொடிகளை அசைத்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தின. பின்னா் அந்தக் குழுக்களும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறின. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

முட்டாள்தனத்தின் வெளிப்பாடு: ராஜீவ் சந்திரசேகா்:

முன்னாள் மத்திய இணையமைச்சரும், கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தது முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகும்.

இது ஓா் உயா்தரப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சுந்தா் பிச்சை போன்ற சாதனையாளா்களின் கருத்துகளைக் கேட்பதற்கும் கிடைத்த வாய்ப்பை வீணடிக்கும் செயலாகும்.

தற்போது மாணவா்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வருகின்றனா். முட்டாள்தனத்தின் யுகத்தில் அல்ல. இதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.