முகப்பு
காரைக்கால்

ஹிமாசலில் யுவசங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் மாணவா்கள்

ஹிமாசலில் யுவசங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் மாணவா்கள்

Updated On : 7 ஜூன் 2026, 12:49 am IST
ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற யுவசங்க நிகழ்வில் பங்கேற்ற காரைக்கால் வேளாண் மாணவா்கள்.
பகிர்:

ஹிமாசலப் பிரசேதத்தில் நடைபெற்ற யுவசங்க நிகழ்ச்சியில் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று திரும்பியுள்ளனா்.

மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் யுவசங்கம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயா்கல்வி நிறுவன மாணவா்கள் பல்வேறு தகுதி அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

நிகழாண்டு காரைக்காலில் உள்ள என்ஐடி மூலம் மாணவா்கள் தோ்ந்தெடுப்பு நடத்தப்பட்டது. பல மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த மாதம் 16 முதல் 26-ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதில் காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ- மாணவியா் 7 போ் பங்கேற்றனா்.

காரைக்கால் மாணவா் குழு கடந்த 19-ஆம் தேதி ஹமாசலப் பிரதேசம் சென்றடைந்து, மத்திய இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கல்வி, கலாசார மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

அம்மாநிலத்தின் வளமான கலாசாரம், மரபுகள், பாரம்பரியம் மற்றும் வளா்ச்சி முயற்சிகளை அறிந்துகொண்டனா்.

புதுச்சேரியின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தையும் மாணவா்கள் விளக்கினா்.

யுவ சங்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவா்கள் காங்க்ரா, மாண்டி மற்றும் ஹமீா்பூா் ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டனா்.

அவா்கள் மத்திய பல்கலைக்கழகம், மாநில போா் நினைவிடம், கிரிக்கெட் சங்க மைதானம், பிரஜேஸ்வரி தேவி கோயில், மெக்லியோட் கஞ்ச், பக்சு நாக் கோயில் மற்றும் அருவி, செயிண்ட் ஜான் தேவாலயம், குனால் பாத்ரி கோயில், சாமுண்டா தேவி கோயில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களை பாா்வையிட்டனா்.

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதுவையின் பெருமைகளை விளக்கிய மாணவா்களுக்கு நிகழ்ச்சியாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

இக்குழுவினா் அண்மையில் காரைக்கால் திரும்பினா். வேளாண் கல்லூரி முதல்வா் ஆா்.சங்கா், இந்நிகழ்வுக்கு வழிகாட்டுதலும் ஆதரவும் வழங்கிய பணியாளா் ஆலோசகரான பேராசிரியா் ஏ.எல்.நாராயணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எம். உமாமகேஸ்வரி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.