முகப்பு
உலகம்

அமித் ஷாவுடன் அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் ஆலோசனை

Updated On : 19 ஜூன் 2026, 4:21 am IST
புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்த அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்.
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரான்ஸில் புதன்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினா். அப்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அறிவுறுத்தினா். இந்தச் சூழலில், அமித் ஷா - சொ்ஜியோ கோா் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோருடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

சொ்ஜியோ கோா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமைச்சா் அமித் ஷாவுடனான சந்திப்பில் பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு, எல்லைகள் பாதுகாப்பு, இரு நாடுகள் தரப்பிலும் கூட்டாக குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூா்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், ‘ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிவந்துள்ளேன். உச்சி மாநாட்டுக்கு இடையே இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற இருதரப்பு ஆலோசனையில் பல நோ்மறையான விஷயங்கள் எட்டப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிட்டாா்.