துபை, தோஹாவில் இரண்டாவது நாளாக வெடிச்சத்தம்!
துபை, தோஹாவில் இரண்டாவது நாளாக வெடிச்சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபை, தோஹாவில் இரண்டாவது நாளாக வெடிச்சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைப்பதாக ஈரான் கூறியிருந்தாலும், வளைகுடா நகரங்களில் உள்ள பல்வேறு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துபை மற்றும் கத்தாரின் தலைநகரான தோஹாவில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. முதன்முறையாக ஓமன் நாடும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானது.
ஓமனின் வணிகத் துறைமுகத்தை நோக்கி சனிக்கிழமை இரண்டு ட்ரோன்கள் ஏவப்பட்டன. இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் துபையில் இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் இரண்டு வீடுகள் மீது விழுந்ததில் இருவர் காயமடைந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் துபை சர்வதேச விமான நிலையம், புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் செயற்கை தீவான பாம் ஜுமேரா ஆகியவை சேதமடைந்தன. கத்தாரில் தொழில்பேட்டை பகுதியில் ஏவுகணை இடிபாடுகள் விழுந்ததில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் துபையின் விமான நிலையம், உலகின் பரபரப்பான பயண மையங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.