உயிருக்குப் போராடும் மோஜ்தபா கமேனி? பாதுகாப்பை அதிகப்படுத்தும் ‘நோபோ’ ரகசிய படையினர்!
ஈரானின் புதிய தலைவர் மோஜ்தபா கமேனியைப் பாதுகாப்பதற்காக ரகசியப் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதைப் பற்றி...
அமெரிக்காவின் தாக்குதலில் காயமடைந்த ஈரானின் புதிய தலைவர் மோஜ்தபா கமேனியைப் பாதுகாப்பதற்காக ரகசியப் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி ஜெனீவாவில் பேச்சுவார்த்தையுடன் தொடங்கி பிரச்சினை போராக உருவான நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோருடன் முக்கியத் தலைவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர், கடந்த இரண்டு வாரங்களாக வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. போர் தொடங்கி இதுவரை 14 நாள்களைக் கடந்த நிலையில், இதுவரை பிடிகொடுக்காத ஈரானின் கார்க் தீவு மீது ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்ததாக அதிபர் டிரம்ப் இன்று (மார்ச் 14) காலை தெரிவித்தார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவர் கமேனியின் மகனும் புதியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவருமான மோஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து விட்டதாகவும், அவர் தற்போது கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், அவர் தனது முதல் உரையைக்கூட தொலைக்காட்சிகளில் தோன்றாமல், அறிக்கையாகவே வெளியிட்டிருந்தார்.
மோஜ்தபா கமேனி கொல்லப்படாமல் உயிரிக்குப் போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் அவருக்குப் பதிலாக ‘நோபோ’ எனப்படும் ரகசியப் பாதுகாப்புக் குழு அவருக்குப் பாதுகாப்பாகவும் போரை வழிநடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்ஷெத், “அமெரிக்காவின் தாக்குதலில் மோஜ்தபா சிதைந்துவிட்டார் என்றும், அவரைப் பாதுகாப்பது நோபோவின் வேளை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
யார் இந்த நோபா படையினர்?
மறைந்த மதகுரு அயத்துல்லா கமேனியின் ஆட்சிக் காலத்தில் 1991 ஆம் ஆண்டு இந்த நோபா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய புரட்சிக்கரப் படையினரிடம் இருந்து தனியே இருக்கும் இந்தப் படைப்பிரிவினர் தலைமை மதகுருவைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஈரானில் ராணுவத்தினர், காலாட்படைகள், விமானப்படை, கடற்படையினர் சேர்ந்த அமைப்பு ஆதர்ஷ் என்றழைக்கப்படுகிறது.
1979 ஆம் ஆண்டு பஹ்லவி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், இஸ்லாமிய புரட்சிக்கரப்படை உருவாக்கப்பட்டது. ராணுவத்தைத் தவிர்த்து இந்தப் படையில் சுமார் 1,20,000 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் தலைமை மதகுருவின் தலைமை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இராக், லெபனான், சிரியா, யேமன் உள்ளிட்ட நாடுகளிலும் தொடர்பு கொண்டுள்ளனர்.