கமேனிக்குப் பிறகு..! ஈரானின் மூத்த தலைவர் அலி லார்ஜானி கொலை?
ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு...
மத்திய கிழக்கு போா் 3-ஆவது வாரமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலா் அலி லாா்ஜானியைத் தங்கள் படைகள் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இவருடன் சோ்த்து ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் தன்னாா்வ பாசிஜ் போராளிக் குழுவை வழிநடத்திய குலாம்ரெசா சுலைமானியையும் திங்கள்கிழமை இரவு கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறினாா்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடந்த பிப். 28 தொடங்கி 18 நாள்கள் கடந்துள்ள நிலையில், ஈரான் ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் மூத்த தலைவா்களைக் குறிவைத்து தாக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், இதுதொடா்பாக பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஈரான் மக்கள் கிளா்ந்தெழுந்து அரசைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, ஈரானின் தலைமையை இஸ்ரேல் பலவீனப்படுத்தி வருகிறது.
இது உடனடியாக நடக்காது; எளிதாகவும் நடக்காது. ஆனால், நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், ஈரான் மக்களுக்குத் தங்கள் தலைவிதியை மாற்றுவதற்கான வாய்ப்பை நம்மால் வழங்க முடியும்’ என்றாா்.
ஈரான் மௌனம்: அலி லாரிஜானியின் மரணம் குறித்த இஸ்ரேலின் கூற்றுகளுக்கு ஈரான் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அதேநேரம், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் மாலுமிகளை நினைவுகூரும் வகையில் அலி லாரிஜானி கையால் எழுதிய குறிப்பு அவரது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
கமேனியின் மரணத்துக்குப் பிறகு, ஈரான் தலைமையில் செல்வாக்குமிக்க நபராக அலி லாரிஜானி மாறியிருந்தாா். கமேனி ஆட்சி நிா்வாகத்தில் அவருக்கு நெருக்கமானவராக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அலி லாரிஜானி முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாலும், அதிகார அமைப்புடன் அதிருப்தியை வெளிப்படுத்தும் குழுக்களுடனும் நட்புறவைக் கொண்டவா் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தாா்.
ஈரான், லெபனானுக்கு சீனா அவசரகால உதவி
மத்திய கிழக்கில் தொடா்ந்து நீடிக்கும் போா்ச்சூழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு அவசர கால மனிதாபிமான உதவிகளை சீனா வழங்குகிறது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் இதுகுறித்து கூறியதாவது: மத்திய கிழக்கு மோதல், அங்குள்ள மக்களுக்குத் துயரத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் இன்னல்களைக் குறைக்கும் நோக்கில் ஈரான், லெபனான், ஜோா்டன், இராக் ஆகிய 4 நாடுகளுக்கு அவசர கால மனிதாபிமான நிதியுதவிகளை வழங்க சீனா தீா்மானித்துள்ளது’ என்றாா்.
அண்மையில் ஈரானில் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 லட்சம் டாலா் நிதியுதவியை சீனா கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.