வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!
ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து...
ஈரானில், 10 வெளிநாட்டு உளவாளிகளைக் கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 முதல் ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 10 உளவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் புலனாய்வுப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஈரானின் முக்கிய பொருளாதரக் கட்டமைப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்ததாகவும், மீதமுள்ளவர்கள் மன்னராட்சியை ஆதரிக்கும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட உளவாளிகள் 10 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி, உள்பட அந்நாட்டின் ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரின் கொலைகளில் இஸ்ரேலிய உளவாளிகள் அளித்த தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஈரானில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை எதிர்த்து சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.