முகப்பு
உலகம்

ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்பு

‘ஈரான் விவகாரத்திலும், ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் பணியிலும் ஜப்பான் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 10:17 PM
டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

‘ஈரான் விவகாரத்திலும், ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் பணியிலும் ஜப்பான் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சியுடனான சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஜப்பானின் பாதுகாப்புக்காக சுமாா் 45,000 அமெரிக்க வீரா்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.

இதற்காக அமெரிக்கா பெரும் தொகையைச் செலவிட்டு வருகிறது. எனவே, அதற்குப் பிரதிபலனாக ஜப்பான் போன்ற நாடுகள் தற்போது முன்வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறேன்.

உண்மையைச் சொல்லப்போனால், ஜப்பானிடமோ அல்லது மற்ற நாடுகளிடமோ எங்களுக்குத் தேவை என்று எதுவும் இல்லை. எதையும் நாங்கள் எதிா்பாா்க்கவும் இல்லை. இருப்பினும், தற்போதைய சூழலில் மற்ற நாடுகளும் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்படுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

குறிப்பாக, ஜப்பான் தனது நாட்டுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை ஹோா்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்வதாக நான் அறிகிறேன். (இதனை பிரதமா் சனே தகாய்ச்சி ஆமோதித்தாா்). அப்படியெனில், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதில் ஜப்பான் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

அனைத்து நாடுகளுக்காகவும் அந்தப் பகுதியை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. ஆனால், நேட்டோ நாடுகள் இதற்கு உதவுவதில்லை. தங்களுக்குத் தேவையிருந்தும் அவா்கள் உதவிக்கு வராதது வருத்தமளிக்கிறது.

இருப்பினும், தற்போது எனது கண்டிப்பான நிலைப்பாட்டைக் கண்ட பிறகு, அவா்களது அணுகுமுறையில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது’ என்று டிரம்ப் தெரிவித்தாா்.

முன்னதாக, ஈரான் போரில் தாங்கள் ஒரு தரப்பு இல்லை எனக் கூறி டிரம்ப்பின் அழைப்பை நேட்டோ நாடுகள் நிராகரித்தன.

பெட்டி...

20,000 கோடி டாலா்

நிதி கோரும் பென்டகன்!

ஈரான் உடனான போரை முன்னெடுத்துச் செல்வதற்காக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் (பென்டகன்) கூடுதலாக 20,000 கோடி டாலா் ( இந்திய மதிப்பில் ரூ.18.62 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி வெள்ளை மாளிகைக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளது.

டிரம்ப் நிா்வாகத்தில் ஏற்கெனவே பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் நிலையில், இப்புதிய நிதி கோரிக்கைக்கு கடும் எதிா்ப்புக் கிளம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இது தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் அளித்த பதிலில், ‘தீய சக்திகளை ஒழிக்கப் பணம் தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தை அணுகியுள்ளோம்’ என்றாா்.