ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்
ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளர் அலி முகமது நைனி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...
ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
”ஈரானிடம் தற்போது யூரேனியம் செறிவூட்டும் திறனோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனோ இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.
ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளர் அலி முகமது நைனி இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் 20 மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு ஏவுகணை உற்பத்தி செய்துவருகிறோம். போர்ச்சூழலிலும் நாங்கள் தொடர்ந்து ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், ஆயுதங்களைக் கையிருப்பு வைப்பதிலும் எங்களுக்கு எந்தச் சிக்கலுமில்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் பள்ளிகளில் 20 என்பது சிறந்த மதிப்பெண்ணாகக் குறிப்பிடப்படுவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தப் போர் தொடர்ந்து நடைபெறும். எதிரிகளின் படைகள் முற்றிலுமாகச் சோர்வடையும் வரை இந்தப் போர் தொடரவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். போரின் நிழல் இந்த நாட்டை விட்டு அகலும்போது இந்தப் போர் முடிவடையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.