அமைதி ஒப்பந்தம்! ஹோர்முஸ் திறப்பு, அமெரிக்க முற்றுகை நீக்கம்! - பாகிஸ்தான் அறிவிப்பு
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என மத்தியஸ்தகரான பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில், வளைகுடா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் கையெழுத்திட்டதாக, ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Advertisement
Advertisement
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அதிபர் டிரம்ப் மற்றும் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா மோஜ்தபா கமேனிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது இருதரப்புக்கும் இந்த மோதலை ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காண வேண்டும் என்பதில் உள்ள உறுதிபாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதன் முதற்கட்டமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்கும், அதேவேளையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைவர்கள் முறைப்படி ஒப்பந்தத்தில் கைழுத்திடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.