ஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் அதிருப்தி
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய சமரசத் திட்டத்தை ஈரான் அமெரிக்காவிடம் சமா்ப்பித்துள்ளது.
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய சமரசத் திட்டத்தை ஈரான் அமெரிக்காவிடம் சமா்ப்பித்துள்ளது.
ஆனால், ஈரானின் இப்புதிய முன்மொழிவும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் இந்தச் சமரசத் திட்டம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பேசிய பாகிஸ்தான் அதிகாரி ஒருவா், ‘ஈரான் தனது புதிய முன்மொழிவை வியாழக்கிழமை இரவு எங்களிடம் ஒப்படைத்தது. அதை உடனடியாக அமெரிக்க தரப்புக்கு அனுப்பி வைத்தோம்’ என்று தெரிவித்தாா்
Advertisement
முன்னதாக, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டாலும், அணுசக்தித் திட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி, ஈரான் சமா்பித்த சமரசத் திட்டத்தை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், ஈரான் முன்வைத்துள்ள புதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘அமெரிக்காவின் கடுமையான தடைகளால் ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அவா்கள் ஒப்பந்தம் செய்ய துடிக்கின்றனா். ஆனால், அவா்களின் புதிய முன்மொழிவிலும் எனக்கு திருப்தியில்லை. எனவே, அடுத்தகட்டமாக என்ன நடக்கிறது என்று பாா்ப்போம்.
அமெரிக்க பிரதிநிதிகளின் பாகிஸ்தான் பயணத்தை நான் ரத்து செய்த பிறகு, தற்போது தொலைபேசி வாயிலாகவே பேச்சுவாா்த்தைகள் தொடா்கின்றன. ஈரானின் தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லை. அவா்கள் அனைவருக்கும் உடன்பாட்டுக்கு வர விரும்புகின்றனா். ஆனால், குழப்பத்தில் உள்ளனா்’ என்றாா்.