தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!
லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதனால், தெற்கு லெபனானில் உள்ள 9 கிராமங்களில் வசிக்கும் மக்களை இன்று (மே 9) உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
"பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் 9 கிராமங்களைப் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
Advertisement
அவரின் பதிவில், "உங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறுங்கள். கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வெளியேறி திறந்தவெளிப் பகுதிகளுக்குக் குறைந்தது 1,000 மீட்டர் தூரத்தில் விலகி இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதலே போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பும் தெற்கு லெபனானில் நாள்தோறும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் 85-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது வான்வழி, தரைவழி தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருந்தது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அவர்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா இரு நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சமீபத்தில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்திருந்தது.