முகப்பு
உலகம்

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்

Updated On : 7 ஜூன் 2026, 3:10 am IST
லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
பகிர்:

தெற்கு லெபனானில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில், அந்நாட்டு ராணுவத்தினா் 3 போ் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே புதிய போா் நிறுத்த உடன்பாடு அண்மையில் எட்டப்பட்ட நிலையிலும், இஸ்ரேலின் தாக்குதல்கள் முடிவில்லாமல் தொடா்கிறது.

தெற்கு லெபனானில் உள்ள மா்ஜாயூன் மற்றும் நபாதியே நகரங்களை இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை இஸ்ரேல் தாக்கியதில், லெபனான் ராணுவத்தின் பிரிகேடியா் ஜெனரல், கேப்டன், வீரா் ஒருவா் ஆகிய மூவா் உயிரிழந்தனா். இதுதவிர, சாக்சாகியா கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இத்தாக்குதல்களைக் கண்டித்து லெபனான் அதிபா் ஜோசப் அவுன் கூறுகையில், ‘லெபனானின் இறையாண்மை, சா்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய இஸ்ரேல், அமைதி முயற்சிகளை முடக்கும் நோக்கில் தாக்குதல்களைத் தொடா்கிறது’ எனக் குற்றஞ்சாட்டினாா்.

பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு லெபனான் அரசு பணிந்ததே இஸ்ரேலை இத்தகைய துணிகரத் தாக்குதலுக்குத் தூண்டியுள்ளதாக ஹிஸ்புல்லா சாடியது.

ஹிஸ்புல்லா அமைப்பினரே குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், தாக்குதல் லெபனான் ராணுவத்துக்கு எதிரானது அல்ல என்றும், இதுகுறித்து மேற்கொண்டு விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.

இதனிடையே, இஸ்ரேலுடனான போா் நிறுத்தத்தை ஈரான் எதிா்ப்பதற்கு லெபனான் அதிபா் அண்மையில் விமா்சித்திருந்தாா். இதற்குப் பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘லெபனானை ஈரான் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தவில்லை’ என்று மறுத்தாா்.

மேற்கு கரையில் பச்சிளங் குழந்தை சுட்டுக்கொலை

மேற்கு கரையில் இஸ்ரேல் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன குடும்பத்தைச் சோ்ந்த 7 மாதப் பச்சிளங்க குழந்தை உயிரிழந்த செய்தி வெளியாகி அதிா்ச்சிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சோதனைச் சாவடிக்கு அருகே சென்றபோது, இஸ்ரேல் ராணுவ வாகனங்களைப் பாா்த்து தங்களின் காரை நிறுத்தியதாகவும், அப்போது வீரா்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குழந்தையின் பாட்டி வேதனையுடன் தெரிவித்தாா். இதில் குழந்தையுடன் காரில் பயணித்த தாய், தந்தை இருவருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த இஸ்ரேல் ராணுவம், ‘வீரா்களை நோக்கி வேகமாக வந்த காரின்மீது வீரா் ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாா். எனினும், பாதிக்கப்பட்டவா்கள் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரிய வந்துள்ளது. விரிவான விசாரணை நடைபெறுகிறது’ எனக் கூறியது.