கணவருடன் இணைவார்! 

என் மகள் கணவர் வீட்டில் சிறிய பிரச்னை ஏற்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டில்தான் வாழ்கிறார். எப்பொழுது கணவருடன் இணைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 
Published on
Updated on
2 min read

என் மகள் கணவர் வீட்டில் சிறிய பிரச்னை ஏற்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டில்தான் வாழ்கிறார். எப்பொழுது கணவருடன் இணைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகர், புதுக்கோட்டை

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். ஆறாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் ஐந்தாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். பொதுவாக ஆறாம் பாவாதிபதி ஆறாமிடத்திலாவது, கேந்திர (1, 4, 7, 10) திரிகோணங்களிலாவது (1, 5, 9) இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஆனால் முதலில் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்து கடைசியில் வெற்றி பெறுவதாக அமையும். 

பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரின் வீடான ரிஷப ராசியை அடைகிறார். சனி பகவான் லக்னத்தில் மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருப்பதால், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகம் உண்டாகிறது. 

ஐந்தாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். புத, சுக்கிர பகவான்களின் இணைவு மகாவிஷ்ணு, மகாலட்சுமி யோகமாகும். 

இரண்டாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பதினொன்றாம் வீட்டிலேயே கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) மூலத்திரிகோணம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (கஜகேசரி யோகம்), ஒன்பதாம் பார்வை ஏழாம் வீட்டின் மீதும் படிகிறது. 

ஏழாம் வீட்டிற்கதிபதியான சூரியபகவான் பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நீச்ச வீடான துலாம் ராசியை அடைகிறார். சிவராஜ யோகமும், பௌர்ணமி யோகமும் உண்டாகின்றன. 

மூன்றாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 

கேது பகவான் இரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்திலும், ராகு பகவான் எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதியும், சுகாதிபதியும் சுப பலம் பெற்றிருப்பது சிறப்பு. 

தற்சமயம் சனி பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி, இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். வரும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சுபமான காலக் கட்டம் தொடங்கயிருப்பதால், குடும்பத்தில் பெரியவர்களின் உதவியுடன் பேசி, தக்க முயற்சி மேற்கொள்ளவும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அவர் தன் கணவர் குடும்பத்துடன் இணைவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com