நடப்பாண்டில் டேப்லெட் கம்ப்யூட்டர் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சியை எட்ட சம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் இந்தியா (மொபைல் பிஸினஸ்) இயக்குநர் ஆதித்ய பாபர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் பிரிவு விற்பனை சிறப்பாக உள்ளது. கடந்த 2018-இல் டேப்லெட் வர்த்தகம் முந்தைய ஆண்டை விட மதிப்பின் அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியையும், அதிகபட்ச எண்ணிக்கையையும் தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில், நடப்பாண்டில் இப்பிரிவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக, நடப்பாண்டில் டேப்லெட் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சியை எட்டுவதே எங்களின் தற்போதைய இலக்கு.
இந்தாண்டு தொடக்க நிலவரப்படி, இந்தியாவில் மொத்த டேப்லெட் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இது. நடப்பாண்டு இறுதியில் 60 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேப்லெட் வாங்குவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதிகரித்து வரும் தேவையை ஈடு செய்வதற்காக, புதிய டேப்லெட் கம்ப்யூட்டர்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.