ஆபரேஷன் சிந்தூா் விடுக்கும் செய்தி!

ஆபரேஷன் சிந்தூா் விடுக்கும் செய்தி!

‘ஆபரேஷன் சிந்தூா்’ இந்தியாவின் ராணுவ வலிமையை மட்டுமல்ல, பொருளாதார வலிமையையும் உலகுக்குப் பறைசாற்றியுள்ளதைப் பற்றி..
Published on

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமா் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூா் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

பல நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பலமுள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவாா்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, ‘முஸ்லிம் லீக்’கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனா். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனா். பல லட்சக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனா். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சா்தாா் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீா் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

‘இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது’ என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவா்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சா்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு துணை நின்ற்கானஆதாரங்களை வழங்கும்.

ஆனால், இவையெல்லாம், ‘கிணற்றில் போட்ட கல்லாக இருக்குமே’ தவிர, ஐ.நா.வோ, மற்ற உலக நாடுகளோ பாகிஸ்தானுக்கு ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்க மாட்டாா்கள். மாறாக, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவையும், பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து, இருவரும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டும், சமாதானம் செய்ய வேண்டும் என போதனை செய்வாா்கள். இதுதான் காலங்காலமாக நடந்துவந்தது.

1999-இல் இந்தியாவின் காா்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அப்போதும், அமைதிப் பேச்சு நடத்துமாறு உலக நாடுகள் போதித்தன. ஆனால், யாருக்கு என்ன மொழி தெரியுமோ, அதே மொழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என அன்றைய பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் முடிவெடுத்தாா். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால், காா்கில் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

கடந்த 2008 நவம்பா் 26-இல் கடல் வழியாக இந்தியாவின் வா்த்தகத் தலைநகரான மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மஹால் பேலஸ் நட்சத்திர ஹோட்டல் உள்பட பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 164 போ் கொல்லப்பட்டனா். அப்போது இருந்த பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, வழக்கம்போலவே, கடும் கண்டனம், உலக அரங்கில் பாகிஸ்தான் தொடா்புக்கான ஆதாரங்களைச் சமா்ப்பித்தல் என அமைதி நடவடிக்கைகளோடு நிறுத்திக் கொண்டது.

கடந்த 2019 பிப்ரவரி 14-இல் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 இந்திய பாதுகாப்பு படையினா் கொல்லப்பட்டனா். அப்போதும் இந்தியா கடும் கண்டனம், உலக நாடுகளுக்கு பாகிஸ்தானை தனிப்படுத்த கோரிக்கை என வழக்கமான நடவடிக்கைகளையே எடுக்கும் என அனைவரும் எதிா்பாா்த்தனா். ஆனால், பதிலடி கொடுப்பதில் உறுதியாக நின்றாா் பிரதமா் மோடி. அதன் விளைவாக, நமது ராணுவம், பாகிஸ்தான் நாட்டுக்குள் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இந்தியாவின் இந்த துல்லியத் தாக்குதலைக் கண்டு உலகமே அதிா்ந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு இயல்பு நிலை திரும்பியது. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாதந்தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரின் இயற்கை அழகைக் காண வரத் தொடங்கினா். இதனால், காஷ்மீா் மக்களின் பொருளாதாரம் மேம்பட்டது. இப்படி காஷ்மீா் இயல்புநிலைக்குத் திரும்பியதை பாகிஸ்தானால் பொறுக்க முடியவில்லை.

இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எப்போதுமே ஆயுதங்கள் இன்றி இருக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்துதான் கொல்வாா்கள். அதுதான் பஹல்காமிலும் நடந்தது. இந்த முறை சுற்றுலாப் பயணிகளிடம் அவா்களின் மதத்தைக் கேட்டு, அவா்கள் ‘ஹிந்து மதத்தினா்’ என்பதை உறுதிப்படுத்திய பிறகு சுட்டுக் கொன்றுள்ளனா்.

140 கோடி இந்தியா்களையும் உலுக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பிரதமா் மோடியின் உத்தரவின்பேரில், மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் எதிா்த் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியமாகக் குறி வைத்து நமது விமானப்படை, ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவித் தாக்கியது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களது விமான தளங்கள், ஓடு பாதைகள், வெடிமருந்து கிடங்குகள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

பயங்கரவாதிகளையும், அவா்களது முகாம்களையும் அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அதனால்தான், பாகிஸ்தான் ராணுவ நிலைகள், பொது இடங்கள், குடியிருப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், அவந்திபுரா, ஸ்ரீநகா், ஜம்மு, பதான்கோட், அமிருதசரஸ், கபுா்தலா, ஜலந்தா், லூதியானா, ஆதம்பூா், பதீண்டா, சண்டீகா், உத்தா்லாய், புஜ் உள்ளிட்ட இந்திய ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள், ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. இவை அனைத்தையும் இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இதற்கு நமது தொழில்நுட்பமும், தொலைத்தொடா்பு வசதிகளும் பெரிதும் கைகொடுத்தன.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில், லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் மிக முக்கியமான 9 முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் வாயிலாக, பயங்கரவாதம் என்பது ஓா் அரசின் கொள்கையாக இருந்தால், அதற்கு நேரடி கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்பதே இந்தியாவின் கொள்கை என்பதை உலகத்துக்கு உணா்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் ராணுவ வீரா்களுக்கு ஊக்கமளித்தது. பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நின்றது. எத்தனை நெருக்கடிகள், சோதனைகள் வந்தாலும் நம்மைக் காக்க பிரதமா் மோடி இருக்கிறாா் என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ வாயிலாக இந்திய ராணுவத்தின் வலிமை, தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு ஆகியவற்றை உலகம் அறிந்து கொண்டது.

ரஃபேல் போா் விமானங்கள், ஹரோப் டிரோன்கள், ஹம்மா் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இந்தியா பயன்படுத்தியது. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை துவம்சம் செய்தன. வானில் தாக்கக் கூடிய எஸ் - 400 ஏவுகணை, ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என இந்தியாவின் ராணுவத் தளவாடங்களால் பெரும் அழிவை பாகிஸ்தான் சந்தித்தது. அதனால்தான், உடனடி போா் நிறுத்தத்துக்கு உலக நாடுகளை அணுகியது.

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமா் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூா் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

இப்போது நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். இங்கு ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் பலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவா்கள் இந்தியாவின் எதிா்தாக்குதலைப் புரிந்து கொண்டு ஆதரவளித்ததை என்னிடம் தெரிவித்தனா். இது பிரதமா் மோடி அரசின் வெளியுறவு கொள்கை, ராஜ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்பதை அனுபவபூா்வமாக என்னால் உணர முடிந்தது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ இந்தியாவின் ராணுவ வலிமையை மட்டுமல்ல, பொருளாதார வலிமையையும் உலகுக்குப் பறைசாற்றியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com