/

துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு

துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக

News image
Updated On :18 நவம்பர் 2012, 12:49 pm

dinamani

துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

படத்தின் காட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தினரைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சென்னையில் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக காட்சிகள் அமைப்பது எங்கள் நோக்கமல்ல. படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.