நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜிநாமா செய்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் நாசர் தலைவராகவும் பொன்வண்ணன் துணைத்தலைவராகவும் பதவி வகித்துவருகிறார்கள். பொதுச் செயலாளராக விஷால் உள்ளார். இந்நிலையில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் அறிவித்துள்ளார். இதற்கான ராஜிநாமா கடிதத்தை தலைவர் நாசரிடம் அவர் வழங்கியுள்ளார்.
நடிகர் சங்கம் அரசியல் சார்பு எதுவுமில்லாமல் செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின்படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல். பதவிக்காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் என்று தனது ராஜிநாமா கடிதத்தில் பொன்வண்ணன் காரணங்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்வண்ணன் கடந்த 4-ம் தேதியே தனது ராஜிநாமா கடிதத்தை நாசருக்கு அனுப்பிவிட்டார். எனினும் பொன்வண்ணனின் ராஜிநாமா கடிதம் நடிகர் சங்கத்தால் இதுவரை ஏற்கப்படவில்லை என அறியப்படுகிறது.