ஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
த்ரிஷா அதனது மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஒரு நடிகையின் திரைவாழ்வு எத்தகையது என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர்களின் இளமையும் அழகும் குறைந்துவிட்டாலோ, திருமணம் நடந்துவிட்டாலோ ஹீரோயினாக நடிக்கும் தகுதியை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். கனவுக் கன்னியாக சில காலம் இருந்தவர்கள் கோலிவுட் பக்கங்களில் காணாமல் ஆகிய நிகழ்வுகள் அதிகம் உண்டு. அண்ணி, அம்மா என்று கேரக்டர் ரோலில் சில நடிகைகள் தொடர்ந்தாலும் வெகு சிலர் மட்டுமே விடாப்பிடியாக தங்கள் ஸ்டார் வேல்யூவை தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்களுள் த்ரிஷாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பார்பி டால் போல முகபாவனைகளை அதிகம் வெளிப்படுத்தாமல் இருந்த த்ரிஷா பின்னர் நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். சாமி, கில்லி போன்ற படங்கள் த்ரிஷாவுக்கு பாராட்டை அள்ளித் தந்தன. தனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் அவர் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்களிடமிருந்தும், திரைத் துறையினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. {pagination-pagination}
இதற்கு நன்றி தெரிவித்த த்ரிஷா இன்னும் தான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று பகிர்ந்துள்ளார். மோகினி திரைப்படத்தை தற்போது பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.