

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் ரூ. 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்க உள்ளார் ரஜினி.
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சி மீது அதிக கவனம் குவிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.