/

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!

இயக்குநர் மற்றும் கதாநாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும் எனச் சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2017, 5:30 am

DIN

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்றுப் படமான ‘பத்மாவதி’ திரைப்படத்திற்குப் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் இப்போது இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும் எனச் சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபுத்திர வம்சத்தினரின் உண்மை வரலாற்றை அறியாமல் இயக்குநர் சஞ்சய் லீலா தவறுதலான ஒரு கதையை எழுதியிருப்பதாகவும், இது ராஜபுத்திரர்களை அவமானப் படுத்தும் ஒரு செயல் எனவும் போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த தாகூர் சோம் ஏற்கனவே பத்மாவதி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தி நடிகை தீபிகா படுகோனை தனது உயிர் மேல் ஆசை இருந்தால் நாட்டைவிட்டு வேளியேறுமாறும் இல்லையேல் அவரது தலை துண்டிக்கப்படும் எனவும் அச்சுறுத்தினார். மேலும் சஞ்சய் லீலா இந்தப் படத்தை திரையிட்டால் பல பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார். இன்னிலையில் இவர்களின் தலையை வெட்டுபவர்களுக்குப் பரிசு தொகை அறிவித்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story image

வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே தீபிகா மற்றும் சஞ்சய் லீலாவிற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது, இப்போது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தி இருக்கிறது காவல் துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.