சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற `இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.
புதுவை அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு (2016) சிறந்த திரைப்படமாக சுதா கொங்கரா இயக்கிய `இறுதிச்சுற்று’தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் விழா மற்றும் இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சஸ் அரங்கில் நடக்கிறது.
புதுவை அரசின் செய்தி விளம்பர துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இத்திரைப்பட விழா இன்று (செப்டம்பர் 8) தொடங்கி 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும். விழாவினை முதலமைச்சர் நாராயண சாமி தொடக்கி வைத்து இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வழங்குகிறார்.
விழாவை தொடர்ந்து `இறுதிச்சுற்று’ திரைப்படம் திரையிடப்படும். மேலும் இவ்விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சஸ் அரங்கில் பொதுமக்கள் பார்வையிடலுக்காக இலவசமாக பன்மொழிப் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதன் விபரங்கள் -
செப்டம்பர் 9 (சனிக்கிழமை) - சித்ரோகர் (பெங்காலி)
செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) - காடு பூக்குன்ன நேரம் (மலையாளம்)
செப்டம்பர் 11 (திங்கள் கிழமை) - ஏர்லிப்ட் (இந்தி)
செப்டம்பர் 12 )செய்வாய்க் கிழமை) - யூ-டர்ன் (கன்னடம்)