ஜஸ்ட் ஃபார் வுமன் என்கிற பெண்கள் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளார் நடிகை சமந்தா. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் சமந்தா கைத்தறியால் உருவான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் தூதராக சமந்தா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தெலங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த இப்பதவி சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் கைத்தறித் தொழிலுக்குப் பிரபலமான டப்பாகா என்கிற கிராமத்துக்குச் சென்று கைத்தறி நெசவாளர்களைச் சந்தித்தார் சமந்தா. தான் இனிமேல் தெலங்கானா கலைஞர்களின் கைத்தறி உடைகளை அதிகளவில் உடுத்துவேன், இந்த உடைகளை மக்களிடம் பரப்புவேன் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கைத்தறி உடைகளை அணிந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சமந்தா ட்வீட் செய்ததாவது: கைத்தறிதான் எதிர்காலம். தொழிலாளியால் உருவாக்கப்படும் துணியை அணிந்தால் அதில் எப்போது ஒரு சிறப்பு இருக்கும். #தெலங்கானாகைவினைக்கலைஞர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.