நாவல்களைப் படமாக்க தமிழ் சினிமா முன்வரவேண்டும்: எஸ். ராமகிருஷ்ணன் கோரிக்கை
ஹாலிவுட் போல நாவல்களைப் படமாக்க தமிழ் சினிமா முன்வரவேண்டும் என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விகடனின் நம்பிக்கை விருதுகள் விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழ்சினிமாவில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நான் எதிர்பார்க்கும் ஒரு மாற்றம், நாவல்களைப் படமாக்க தமிழ் சினிமா முன்வரவேண்டும். ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் நாவல்களை முன்வைத்து எடுக்கப்படுபவை. அதனால் அவை ஒன்றும் குறைந்துபோகவில்லை. பெரிய வெற்றிகளை அடைந்துள்ளன. நாவல்கள் சினிமாவாக மாறுவதால் அந்த நாவல்களும் கூடுதலாக விற்பனையாகின்றன.
படமாக்கப்படவேண்டிய தமிழ் நாவல்கள் என்றொரு பட்டியலை இதற்கு முன்பு எழுதினேன். அந்த நாவல்கள் நம் திரையுலகில் படமாக்கப்படவேண்டும்.
முன்பை விடவும் இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்கள் தமிழ் எழுத்தாளர்களுடன் நெருக்கமாக உள்ளார்கள். நிறைய இலக்கியம் வாசிக்கிறார்கள். எழுத்தாளர்களுடன் பணிபுரிய விருப்பப்படுகிறார்கள். இது நல்ல விஷயம் என்று பேசினார்.