விஸ்வரூபம் படத்தில் ஷங்கர் மகாதேவன் பாடிய உனைக் காணாத பாடலை ஒருவர் அற்புதமாகப் பாடிய விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. தோட்டத்தில் அமர்ந்துகொண்டு சாதாரண தோற்றம் கொண்ட ஒருவர் மிகவும் லயித்து இந்தப் பாடலைப் பாடிய விடியோவைப் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த விடியோ ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஷங்கர் மகாதேவன், அவரைப் பற்றிய தகவல்களைத் தனக்குத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாசாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இதுகுறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம் என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஒருவர், இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்த விடியோவைப் பகிர்ந்தார். பிறகு அவருடைய தொடர்பு எண் கிடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். நீங்கள் கோபி சுந்தரைத் தொடர்புகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அதேபோல கோபி சுந்தரும் இந்த நபருடைய தொடர்பு எண் கிடைத்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.