விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சி கேடிஎம் பிரச்னை காரணமாக ரத்தானது. இதனால் காலையிலேயே 96 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் கடுப்பானார்கள். பிரச்னை காலை 10 மணி அளவில் சரிசெய்யப்பட்டு பிறகு படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
96 படத்தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகோபால், விஷால் நடித்த கத்திச்சண்டை படத்தைத் தயாரித்தார். இதில் விஷால் மற்றும் ஃபைனான்சியர்களுக்கு பணப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கான சம்பளப் பாக்கியைத் திருப்பிக் கொடுத்த பிறகே 96 படத்தைத் திரையிடவேண்டும் என்று விஷால் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால் காலைக்காட்சி ரத்தானதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு 96 படக்கதாநாயகன் விஜய் சேதுபதி இப்பிரச்னையில் தலையிட்டு தன்னுடைய சம்பளம் ரூ. 3 கோடி மற்றும் கூடுதலாக ரூ. 1 கோடி என ரூ. 4 கோடியை அளித்த பிறகே பிரச்னை முடிவுக்கு வந்து படம் திரையிடப்பட்டது.
இந்தப் பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார் வெளியிட்டுள்ள ஆடியோ அறிக்கையில் கூறியதாவது: நந்தகோபாலுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 96 படத்தின் காலைக்காட்சி திரையிடப்படவில்லை. அப்படி ஒரு பிரச்னை இருந்தால் மாற்று வழியை விஷால் யோசித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் விஜய் சேதுபதி ரூ. 1 கோடி தருவதாகக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் படத்தை வெளியிடத் தடையாக இருப்பது அழகல்ல. அதேபோல நந்தகோபாலிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஷாலின் இந்தச் செயல் கண்டனத்துக்கு உரியது. தனது நிலையை விஷால் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனினும் தயாரிப்பாளர் சதீஷ் குமாரின் குற்றச்சாட்டை விஷால் தரப்பு இதை மறுத்துள்ளது.