ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று திடீரென இப்படத்துக்காக இசையமைப்பாளர் ரஹ்மான் பாடிய சிங்கப் பெண்ணே பாடல் இணையத்தில் கசிந்தது. படப்பிடிப்புத் தளத்தில் இப்பாடலைப் படமாக்கும்போது யாரோ ஒருவர் அதைத் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துகொண்டு இணையத்தில் கசியவிட்டதாக அறியப்படுகிறது.
பலரும் அந்தப் பாடலைப் பகிரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தாலும் ட்விட்டரில் அந்தப் பாடல் டிரெண்டிங் ஆகும் அளவுக்குப் பலரையும் சென்று சேர்ந்தது.
இதையடுத்து சிங்கப் பெண்ணே பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.