திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார் மூத்த இயக்குநர் பாரதிராஜா.
இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாரதிராஜா கூறியதாவது:
இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றுக்கும் பதில் தேடுவது முக்கியம்.
தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.
இது செயல்பட வேண்டிய காலகட்டம். கரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையுலகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. கையைப் பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.