/

வெகுசில கலைஞர்களுக்கே வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும்: கமல் இரங்கல்

அன்னைய்யா எஸ்.பி.பி. அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு...

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 8:56 am

DIN

பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் குணமாக வேண்டும் என்று பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்தார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். எஸ்.பி.பி.யின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

எஸ்.பி.பி.யின் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்ததாவது:

அன்னைய்யா எஸ்.பி.பி. அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில் கமல் கூறியுள்ளதாவது:

வெகுசில கலைஞர்களுக்கே அவர் வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி. அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் அவரை வழியனுப்பி வைத்த அவருடைய அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குரலின் நிழல் பதிப்பாகப் பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் பாடும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.