நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை சரண்யா, அன்றைய தினம் நடந்தவற்றைப் பேட்டிகளில் கூறியுள்ளார்.
தனியாா் தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா். சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இரு குடும்பத்தினா்,உறவினா்கள்,நண்பா்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனா்.
சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். நேற்று அதிகாலை, நடிகை சித்ரா, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டிக்கிறார் அவருடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான சரண்யா. சித்ராவின் கடைசி தினம் பற்றி ஊடகங்களுக்கு அவர் பேட்டிகள் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
அன்றைய தினம் எனக்கு இது வித்தியாசமாகப் பட்டது. ஒரு படப்பிடிப்புக்குச் சென்றால் பத்து புகைப்படங்களாவது எடுத்து இன்ஸ்டகிராமில் சித்ரா வெளியிடுவார். ஆனால் நேற்று அடுத்தடுத்து இரு படப்பிடிப்புகளில் சித்ரா கலந்துகொண்டார். என்னுடனும் நான் சென்ற பிறகு இன்னொரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். அதில், ஒரு புகைப்படம் கூட அவர் எடுக்கவில்லை. இன்ஸ்டகிராமில் ஸ்டோரியும் வெளியிடவில்லை. இது வழக்கத்துக்கு மாறானது.
நாம் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று அன்றைய தினம் என்னிடம் சொன்னார். ஆனால் அன்று முழுக்க போனில் மும்முரமாக இருந்தார். அதனால் தான் வம்பு பண்ணி, அவரை வைத்து கிண்டல் செய்வது போல ஒரு விடியோ எடுத்தேன். மேடம் லவ் பண்ண ஆரம்பித்த பிறகு பிரெண்ட்டைக் கண்டுகொள்ளவே மாட்டேங்கிறாங்க என்று சொல்லி விடியோ எடுத்தேன். அதை அவர் இன்ஸ்டாவில் மறுபடியும் பதிவு செய்தார். அதுதான் எங்களுடைய கடைசி விடியோ என நான் நினைக்கவே இல்லை என்றார்.