இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜி.கே. வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றியபோது இளையராஜாவுக்கு அறிமுகமான புருஷோத்தமன், அன்னக்கிளி படம் முதல் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி, ராஜாவின் ஆஸ்தான கலைஞர் என்று பெயர் பெற்றவர். இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு திவாகர், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். நிழல்கள் படத்தில் மடை திறந்து பாடலில் டிரம்மராக நடித்துள்ளார் புருஷோத்தமன்.
இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் இசைக் கலைஞராக உள்ளவரும் பாடகருமான அருண்மொழி, புருஷோத்தமனின் மறைவு குறித்து கூறியதாவது:
தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்.
ஒரு முறை துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச் சொல்லி, தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.
தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று எழுதியுள்ளார்.