படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் திரைப்பட, சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 3,986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சென்னையில் மட்டும் 1459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் திரைப்பட, சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆர்சிபிசிஆர் கரோனா பரிசோதனை செய்துகொண்டு/தடுப்பூசிப் போட்டுக்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.