தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்

ரூ. 1 கோடி தராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சை காரணமாக ரூ. 1 கோடி இழப்பீடு கோரும் நடிகை ரைசா வில்சன்

தவறான சிகிச்சையால் ஏற்பட்ட  பாதிப்பு காரணமாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலையில்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இன்ஸ்டமிராம் தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார் ரைசா வில்சன். அதில் அவருடைய முகம் வீங்கிப் போயிருந்தது. இதுபற்றி ரைசா கூறியதாவது: முகத்துக்கு எளிமையான முறையில் ஃபேசியல் செய்ய தோல் மருத்துவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தேவையில்லாத சிகிச்சையை மேற்கொண்டார். இதன் விளைவாக என் முகம் வீங்கிவிட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னிடம் பேச மறுத்துவிட்டார். அவர் வெளியூர் சென்றுவிட்டதாக ஊழியர்கள் தகவல் தெரிவித்தார்கள் என்றார். ரைசா வில்சன் பகிர்ந்த புகைப்படத்தில் அவருடைய வலதுக் கன்னம் வீங்கியிருந்தது. 

தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரைசா செயல்பட்டுள்ளார் என  தோல் மருத்துவர் பைரவி செந்தில் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

ரைசாவிடம் சிகிச்சைக்கான விளக்கம் தரப்பட்டு படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதற்கு முன்பு பலமுறை எவ்விதப் புகாரும் இல்லாமல் இதே சிகிச்சையை எங்களிடம் ரைசா மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 16 அன்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லேசான பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையுடன் இல்லாமலோ மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றாமல் போனாலோ இதுபோல ஏற்படும். அந்தக் காயம் தானாகச் சரியாகிவிடும். இதனால் தோலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இத்தகவல்களை ரைசா நன்கு அறிவார். இருந்தும் தோல் சிகிச்சைக்காக மக்களிடம் பாராட்டுகள் பெற்று மதிப்புடன் உள்ள மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிக்கையையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ரைசாவின் புகாரால் எனக்கும் மருத்துவமனைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னிப்பும் நஷ்ட ஈடும் கேட்டு ரைசா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தவறான சிகிச்சையால் ஏற்பட்ட  பாதிப்பு காரணமாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். இதுதொடர்பாக மருத்துவர் பைரவில் செந்திலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ. 1 லட்சத்துக்கு 27 ஆயிரத்து ஐநூறு கட்டணம் செலுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். 15 நாள்களுக்குள் ரூ. 1 கோடி தராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com