கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு வயது 38.
2011-ல் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் சஞ்சாரி விஜய். 2015-ல் நானு அவனல்ல, அவளு என்கிற கன்னடப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். கடைசியாக இவர் நடித்த ஏசிடி 1978 படம் கடந்த வருடம் வெளியானது.
கடந்த சனிக்கிழமை, நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் சஞ்சாரி விஜய். நண்பர் வாகனத்தை ஓட்ட, பின்னால் அவர் அமர்ந்து வந்தார். இருவரும் தலைக்கவசம் அணியவில்லை. ஜேபி நகர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது இரு சக்கர வண்டி, மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சஞ்சாரி விஜய்யின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நண்பருக்குக் காலில் அடிபட்டது. இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். சஞ்சாரி விஜய் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அன்றிரவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சாரி விஜய் இன்று அதிகாலை 3.34 மணிக்கு காலமானார். சஞ்சாரி விஜய்யின் உடல் உறுப்புகள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி தானம் செய்யப்பட்டன. கன்னடத் திரையுலகின் பிரபலங்களும் ரசிகர்களும் சஞ்சாரி விஜய்யின் மரணத்துக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்,
நடிகர் சஞ்சாரி விஜய்யின் இறுதிச்சடங்குகளின்போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.